நாடாளுமன்றத்துக்குள் மதுபானம் அருந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? – சபையில் குழப்பம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர்.
அப்போது சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்கு முன்னர் தனக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தநலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதனிடையே, நேற்றிரவு நாடாளுமன்றத்துக்குள் தங்கியிருந்து போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர், சபைக்குள் மதுபானம் அருந்தியதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டினார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், குற்றச்சாட்டை அமைச்சர் ரவி கருணாநாயக்க விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.
இதனால் சபை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர், கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
அதில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்கு வந்து கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதென் முடிவு செய்யப்பட்டது.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பு முடியும் வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார்.