மேலும்

நாடாளுமன்றம் 27ம் நாள் வரை ஒத்திவைப்பு – மகிந்த ஆதரவாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

protest1மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டமும் வரும் 27ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றுமுதல் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தப்பட்டதுடன், இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வெளியிடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆணைக்குழு அதிகாரிகளை மகிந்த ராஜபக்சவிடம் சென்று வாக்குமூலம் பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாக, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச உறுதியளித்தார்.

இதையடுத்து, தமது எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கைவிடுவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்தார்.

அத்துடன் தமது இலக்கு எட்டப்பட்டு விட்டதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தியவர்களிடம் தெரிவித்த அவர், அவர்களைக் கலைந்து செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வெளியில் இடம் பெற்ற போராட்டங்கள் கைவிடப்பட்டன.

protest1

அதேவேளை, இன்று மதியம் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய வரும் 27ம் நாள் வரை சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனால், இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த 19வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 27ம் ,28ம் நாள்களில் விவாதிக்கப்படும் என்றும், 28ம் நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *