சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு – பயிற்சித் திட்டங்கள் குறித்து ஆராய்வு
சிறிலங்காவுக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் யி ஜியான்லியாங், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பல்வேறு இருதரப்பு ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்தும், மற்றும் சீன இராணுவத்துக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சித் திட்ட ஒத்துழைப்புகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், சீனத் தூதுவருடன், சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேணல் லி செங்லினும் கலந்து கொண்டனர்.