சீனாவில் இருந்து திரும்பும் மைத்திரி – அடுத்து பாகிஸ்தான் பயணம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாத முற்பகுதியில் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராகப் பொறுப்பேற்ற மைத்திரிபால சிறிசேன, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்தார்.
அதையடுத்து, அவர் பிரித்தானியா, மற்றும் சீனாவுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர், ஏப்ரல் முற்பகுதியில், பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும், புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கு அமைய, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சமமான முக்கியத்துவத்தை அளிக்க சிறிலங்கா அதிபர் முற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபரின் பாகிஸ்தான் பயண நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், எனினும், சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக இந்தப் பயணம் இடம்பெறும் என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.