கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றுமாலை நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் வி்க்கிரமசிங்க முன்வைத்த வேண்டுகோளை ஏற்று திட்டத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடர்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இம்மாத ஆரம்பத்தில், இந்த்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தது.
எனினும், கடும் மழை, மற்றும் காற்றினால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் சேதமடைந்து வருவதால், அதனைத் தடுக்கும் வகையில், சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளதாக நேற்று முன்தினம், சிறிலங்கா அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இம்மாத இறுதியில் சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.