மோடி – மைத்திரி பேச்சுக்களின் முடிவில் 4 உடன்பாடுகள் கையெழுத்து
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுக்களின் முடிவில் நான்கு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை கொழும்பைச் சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, காலை 9.20 மணியளவில் காலி முகத்திடலில் உள்ள அதிபர் செயலகத்தில் முப்படைகளினதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அத்துடன், சிறிலங்கா கடற்படையினர் சார்பில் 19 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.
அதையடுத்து, சிறிலங்கா அதிபர் செயலகத்தில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின.
தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும், வெளிவிவகாரச்செயலர் எஸ் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளும் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
பேச்சுக்களின் முடிவில், இருநாட்டுத் தலைவர்களுக்கும் முன்னிலையில், வருகை நுழைவிசைவு விசா, இருதரப்பு சுங்க ஒத்துழைப்பு, சிறிலங்காவில் ரவீந்திரநாத் தாகூர் கலையரங்கம் அமைப்பது உள்ளிட்ட நான்கு முக்கிய உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
இதையடுத்து, சிறிலங்கா அதிபரும், இந்தியப் பிரதமரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.