மேலும்

வாக்குறுதிகள் செயலுருப் பெறவேண்டும் – மைத்திரியிடம் வலியுறுத்தினார் டேவிட் கெமரொன்

cameron-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதிகள் அனைத்தும் செயலுருப் பெறுவதையே பிரித்தானியா விரும்புவதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரொன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று பிற்பகல் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரொன்.

“சிறிலங்காவின் புதிய அதிபரின் நல்லெண்ண சமிக்ஞைகள் வரவேற்கத்தக்கவை. அவரது அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரித்தானியா விரும்புகிறது.

சிறிலங்காவின் புதிய அதிபர் மீது பிரித்தானியா நம்பிக்கை வைத்திருக்கிறது. சிறிலங்காவுக்குள் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக புதிய அதிபர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் எனக்கு அந்த நம்பிக்கையை அளிக்கிறது.

புனரமைப்பு தொடர்பான புதிய அதிபரின் முன்முயற்சிகளை பிரித்தானியா ஆதரிக்கிறது.மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு, பிரிந்துகிடந்த சிறிலங்காவை ஒன்றாக்குவதற்கான முயற்சிகள் என புதிய அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

Cameron-maithripala

சிறிலங்காவின் வடக்கே இராணுவத்தின் வசம் இருந்த நிலத்தில் ஒரு பகுதி தமிழர்களுக்கு திருப்பித் தரப்படுவது, சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவமயமாக்கலை அகற்றும் நோக்கில் ஆளுநர்களாக இருந்த இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்திருப்பது, மீள்குடியேற்றத்துறைக்கு தமிழர் ஒருவரையே அமைச்சராக நியமித்திருப்பது போன்ற நவடிக்கைகளை இணைத்துப் பார்க்கும்போது இவை நல்ல ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.

சிறிலங்காவின் மீள்குடியேற்றம் மற்றும் இணக்கப்பாடு தொடர்பிலான இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் புதிய அதிபர் முன்னெடுக்க வேண்டும். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை பிரித்தானியா வழங்கும்.

சிறிலங்காவுடன் பிரிட்டனுக்கு வரலாற்று ரீதியாக வலுவான உறவு நீடிக்கிறது.

புதிய அதிபர் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்துவது போன்ற தனது முன்னெடுப்புக்களை தொடர்வார் என்று நம்புகிறோம்.அதற்கான அனைத்து உதவிகளையும் பிரித்தானியா செய்யும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

022-500x259

அதேவேளை, இந்தச் சந்திப்புக்கு முன்னதாக லண்டனில் இருந்து வெளியாகும் தமிழ் கார்டியனுக்கு தனிக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்த டேவிட் கெமரொன்,  சிறிலங்காவின் போர்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஏற்கவைப்பதிலும், தற்போதைய மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதிலும் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி இந்த மாதம் வெளியிடப்படாமை தொடர்பில் தமிழர்களின் கோபத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

அதேசமயம், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கால அவகாசம் செப்ரெம்பர் வரை ஒத்திப்போடப்பட்டிருப்பதன் விளைவாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஐநாவுடன் பேசவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகத்தன்மை மிக்க உள்ளக விசாரணையை ஏற்படுத்தவும் சிறிலங்கா அரசுக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பான ஆய்வறிக்கை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

அடுத்த ஆறுமாதங்கள் கழித்து மீண்டும் உலகின் கவனம் சிறிலங்கா மீது படியும்.

அப்போது சிறிலங்கா தனது கடந்தகாலத்தை எதிர்கொள்ளக் கூடிய நாடாகவும், மாறுபாடுகளை மறந்து தன்னை மறுசீரமைத்துக் கொள்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யக்கூடிய நாடாகவும் இருக்க வேண்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *