மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டங்கள்
பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலய முன்றலிலும், கொமன்வெல்த் தலைமையகமான மல்பரோ ஹவுஸ் முன்றலிலும், இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும், தமிழர்களுக்கு எதிரான போக்கு மாறவில்லை என்றும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதையும் வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் நேற்று கொமன்வெல்த் நாளை முன்னிட்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நடந்த சிறப்பு ஆராதனையிலும், கொமன்வெல்த் தலைமையகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்விலும், கலந்து கொண்டிருந்தார்.
இதனை ஒட்டியே இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.