இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத் திட்டம் வெளியானது – இரண்டு நாட்களே தங்கியிருப்பார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் நாள் தொடக்கம், 14ம் நாள் வரை சிறிலங்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் 13ஆம் நாள் கொழும்பு வரும் இந்தியப் பிரதமருக்கு, அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படும்.
அன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தும் இந்தியப் பிரதமருக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மதியபோசனம் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
வரும் 13ம் நாள் மாலை, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், இந்தியப் பிரதமர் உரையாற்றுவார்.
இந்திய அமைதிப்படையினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நரேந்திர மோடி, மகாபோதி சமூகத்துக்கும் பயணம் செய்வார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இராப்போசன அரச விருந்து அளிக்கப்படும்.
இந்தியப் பிரதமர் அனுராதபுர, யாழ்ப்பாணம், தலைமன்னார் ஆகிய இடங்களுக்கும் செல்வார்.
யாழ்ப்பாணத்தில் அவர், இந்திய உதவியுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள, கலாசார நிலையத்துக்கான நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைப்பார்.
அத்துடன் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளையும் பயனாளிகளுக்கு கையளிப்பார்.
தலைமன்னார் செல்லும் இந்தியப் பிரதமர் மோடி, இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட, மதவாச்சி தொடக்கம் தலைமன்னார் வரையிலான தொடருந்துப் பாதையில், தொடருந்துப் பயணத்தை ஆரம்பித்து வைப்பார்.
அனுராதபுரத்தில் அவர் சிறிமாபோதிக்குச் சென்று வழிபாடு நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.