புதுடெல்லியில் உடன்பாட்டில் கையெழுத்திடுவதை வேண்டுமென்றே தவிர்த்தேன் – சிறிலங்கா அதிபர்
தனது புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்த போதும், தாம் அதனை வேண்டுமேன்றே தவிர்த்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வர்த்தகர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “எமது வர்த்தகத்துக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்தவொரு உடன்பாட்டையும், எந்தவொரு நாட்டுடனும் செய்யமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.
இரத்தினக்கற்கள் மற்றும் சுரங்கத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்து கொண்ட 16 உடன்பாடுகளை ரத்துச் செய்துள்ளேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவும், இந்தியாவும் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டை செய்து கொள்வதற்குப் பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகின்றன.
எனினும், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இந்தியத் தரப்பின் கை ஓங்கி விடும் என்று சிறிலங்காவின் சேவைத் துறையினர் பதற்றமடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஆண்டுக்கு 5 பில்லியன் டொலருக்கு மேல் வர்த்தகம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.