சோதிடத்தை இப்போது நம்புவதில்லையாம்- மகிந்த கூறுகிறார்
தாம் இப்போது சோதிடத்தை நம்புவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டோன் நாளிதழின் செய்தியாளருடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் மகிந்த ராஜபக்சவை சந்தித்த டோன் நாளிதழின் செய்தியாளர் கடைசியில் விடைபெற முன்னர், அவரிடம் “இன்னமும் சோதிடத்தை நம்புகிறீர்களா?“ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, மகிந்த ராஜபக்ச “இப்போது, நம்பவில்லை“ என்று கூறிவிட்டு உரக்கச் சிரித்துள்ளார்.
“தமிழர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு உதவியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, மேற்குலகம் எமது நண்பர்கள் இல்லை.
பாகிஸ்தான் எங்களுக்கு உதவியது. குறிப்பாக முஷாரப் எமக்கு உதவினார்.
எனது நாட்டில் என்ன நடந்ததோ அந்த கிளர்ச்சி இப்போது உங்கள் நாட்டில் நடக்கிறது. றோ ( இந்திய ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகு) இதற்குப் பின்னால் இருக்கிறது.
பெரும்பாலும் வெளிநாட்டு சக்திகளால் கிழக்கில் உள்ள முஸ்லிம்களும், வடக்கிலுள்ள மக்களும் தவறாக வழிநடத்தப்பட்டனர்.
அதனால் தான் அதிபர் தேர்தலில் தோல்வியடைய நேரிட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.