தமிழ்மக்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட பேரணி
ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிட வலியுறுத்தியும், படையினரின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பெரியளவிலான அமைதிப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 10 மணியளவில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அமைதிப் பேரணி ஆரம்பித்தது.
யாழ்.பல்லைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர், அ. இராசகுமாரன், மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க இந்தப் பேரணி, இடம்பெற்று வருகிறது.
இராமநாதன் வீதி, பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி வழியாக, நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியை இந்தப் பேரணி சென்றடையும்.
அங்கு அமைப்புக்குழுவின் தலைவரின் உரை, மனுக் கையளிப்புடன் இந்த அமைதிப் பேரணி நிறைவடையும்.
இந்தப் பேரணியில், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ்மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்டுள்ள அரசியல் சார்பற்ற முதலாவது தன்னார்வ எழுச்சிப் பேரணியாக இது அமைந்துள்ளது.