இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த விமல் வீரவன்சவின் மனைவி கைது
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்ச சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கடவுச்சீட்டுகளை வெவ்வேறு பெயர்களில் பெற்றுக் கொண்டமை, இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்கு போலியான தகவல்களை, ஆதாரங்களை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சசி வீரவன்ச மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 19ம் நாள் அவரிடம் விசாரணை நடத்த வீட்டுக்கு சென்ற போது அவர் அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார்.
கடுமையான சுகவீனமுற்று மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்றுமாலை மாலபேயில் உள்ள நெவில் பெர்னான்டோ மருத்துவமனையில் வைத்து சசி வீரவன்சவை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடம், திடீரென சுகவீனம் ஏற்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
சுகவீனம் என்று பொய்யான காரணத்தைக் கூறி சசி வீரவன்ச தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கு விமல் வீரசவன்சவும் உடந்தையாக இருந்துள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.