மேலும்

இந்திய பாதுகாப்பு, நிதி அமைச்சர்களை தனித்தனியாகச் சந்தித்தார் மைத்திரி

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும், நிதி அமைச்சர் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள ஐரிசி மௌரியா விடுதியில் நேற்றுமாலை இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்றுமாலை 4.45 மணியளவில், இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதன்போது, கடந்தகால ஊழல்களைக் கண்டறிய நிதிப் புலனாய்வு பிரிவை ஆரம்பிக்க சிறிலங்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று சிறிலங்கா அதிபரால், வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அதையடுத்து. மாலை 5.05 மணியளவில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார்.

இதன்போது இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

நேற்றுமதியம், இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான பேச்சுக்கள் அமைந்திருந்தன.

அதையடுத்து, நேற்றுமாலை 7.30 மணியளவில், இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களை அடுத்து, மைத்திரிபால சிறிசேனவுக்கு இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார் பிரணாப் முகர்ஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *