அறிக்கையைப் பிற்போடும் ஐ.நாவின் முடிவுக்கு அமெரிக்கா, சிறிலங்கா வரவேற்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா நடத்திய விசாரணையின் அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, அமெரிக்காவும், சிறிலங்காவும் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக ரொட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள – தனது பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர்,
“சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், அதையடுத்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவையும் இராஜாங்கத் திணைக்களம் வரவேற்கிறது.
எல்லாத் தரப்புகளினதும், கரிசனைகளையும் திருப்திப்படுத்துவதற்கு அமெரிக்க ஊக்கமளிக்கிறது.
அறிக்கை தாமதிக்கப்படுவது, மனித உரிமை விவகாரங்களில் ஒத்துழைப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்துக்கு ஒரு இடைவெளியை அளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடும் முடிவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவரும் வரவேற்றுள்ளார்.
“பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கான ஜனநாயக செயல்முறைகளை உருவாக்கும் புதிய அரசாங்கத்தின் நகர்வுக்கு ஆதரவாக, சரியான நேரத்தில், எடுக்கப்பட்ட முடிவு இது.
இது உள்நாட்டு விசாரணைகளுக்கு இடைவெளியை அளிக்கும்“ என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.