சிறிலங்காவின் முக்கிய பங்காளராக அமெரிக்கா மாறியுள்ளது – மங்கள சமரவீர உரை
சிறிலங்காவின் பிரதான பொருளாதாரப் பங்காளராக அமெரிக்கா மாறியிருப்பதாகவும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் உள்ள ஊடக மன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்காவே விளங்குகிறது.
சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 23 வீதம் அமெரிக்காவுக்கே இடம்பெறுகிறது.
சுமார் 70 அமெரிக்க நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்துள்ளன.
இதன் மூலம், சிறிலங்காவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்துள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது.
வொசிங்டனுக்கும் கொழும்புக்கும் இடையில் பரந்துபட்டது உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது.
சிறிலங்காவில் ஜனநாயகத்தை வலுப்படுத்திக் கொள்வது, சுதந்திரமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படுவது, எல்லா சமூகங்களும் அமைதியைப் பகிர்ந்து கொள்வதை உறுதிப்படுத்துவதில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் உறுதியான பொறுப்பைக் கொண்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.