கோத்தாவினால் துரத்தப்பட்ட 10 அதிகாரிகளை மீண்டும் இராணுவத்தில் சேர்க்க மைத்திரி உத்தரவு
முன்னைய ஆட்சிக்காலத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட பத்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவ அதிகாரிகள் சிலரை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கட்டாய ஓய்வில் அனுப்பியது.
இவ்வாறு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உள்ளிட்ட 10 அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர்களான பிமல் டயஸ், துமிந்த கெப்பிட்டிவலன்ன, ஜனக மகோற்றி, அத்துல ஹன்னடிகே, வசந்த குமாரப்பெரும மற்றும் கேணல் உபய சிறிவர்த்தன, லெப்.கேணல் பி.ஜெயசுந்தர, கப்டன்களான ரணவீர, கிரிசாந்த ஆகிய பத்து அதிகாரிகளுமே மீண்டும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
ஆயுதப்படைகளின் தளபதிகள் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் நேற்று முதல் இவர்களை படையில் இணைத்துக் கொள்ளும் ஆவணங்களில் ஒப்பமிட்டுள்ளார்.
மீள இணைத்துக் கொள்ளப்படும் பத்து அதிகாரிகளும், வரும் திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவைச் சந்திக்கவுள்ளனர்.