சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றங்கள் – தூக்கி வீசப்பட்டார் கருணா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர், பசில் ராஜபக்சவே தேசிய அமைப்பாளராகப் பதவி வகித்து வந்தார்.
கட்சியின் பொதுச்செயலராக அனுர பிரியதர்சன யாப்பா தொடர்ந்தும் நீடிப்பார். பொருளாளராக, எஸ்.பி.நாவின்னவை நியமிப்பதென்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
அதேவேளை, நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், கட்சியின் யாப்பில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர்களான ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரட்ண ஆகியோரும், கட்சியின் மூத்த உறுப்பினரான அலவி மௌலானாவும், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன ஆகியோர் கட்சியின் மூத்த துணைத் தலைவர்களாகவும், ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திசநாயக்க, பியசேன கமகே, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் கட்சியின் துணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவினால், சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது, சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார்.
அவர் சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவின் சாதாரண உறுப்பினராகவே இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.