மேலும்

தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க சீனா உதவ வேண்டும் – இரா.சம்பந்தன்

sampantharதமிழர்கள் தமது பகுதியில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புவதாகவும், அத்தகைய நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழுவினரிடமே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து நேரில் கண்டறிவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலகத் திணைக்களத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒருவாரகால பயணமாக சிறிலங்கா வந்துள்ளது.

இந்தக் நேற்றுமுன்தினம் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ராவோ ஹூ ஹூவா, அதன் தெற்காசியப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சாங் ஜியுகுயிங் மற்றும் டேன் வேய் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்‌சவின் அணுகுமுறைக்கும், தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாடு குறித்து சீன தூதுக்குழுவினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்.

“ஒரே நாடு, ஒரே மக்கள் என உதட்டளவில் கூறிக்கொண்ட போதிலும் மகிந்த ராஜபக்‌ச சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக மட்டுமே நடந்து கொண்டார்.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ அனைவரையும் உள்ளடக்கியதான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றார்.

அனைத்து மக்களின் பிரதிநிதியாக இருக்க விரும்புகின்றார். அனைவரது கருத்துகளையும் செவிமடுத்து முன்செல்ல விரும்புகின்றார்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் நியாயமான ரீதியில் நடந்து கொள்ள விரும்புபவர்கள்.

ஆனால், அவர்களுக்கு சரியான தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும். துரதிர்ஷ்டவசமாக மகிந்த அதைச் செய்திருக்கவில்லை.

தாம் அதிபராக இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமையால் சிங்கள மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தமக்கே வாக்களிப்பார்கள் என மகிந்த எண்ணியிருந்தார்.

ஆனால், சிங்கள மக்கள் அந்த எண்ணத்தைப் பொய்ப்பித்து விட்டார்கள்”  என்று குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏன் தேசிய அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வினாவுக்கு இரா. சம்பந்தன்,  பதிலளிக்கையில்

“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போதைய அரசு குறுகிய காலத்திற்கே இருக்கும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெறுவது தீர்வாக அமைந்துவிடாது.

மாறாக, காத்திரமான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதான தீர்வையே தமிழர் தரப்பு எதிர்பார்த்து நிற்கிறது.

தமிழர்கள் தமது பகுதிகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தன்னாட்சியுடன் கூடிய தீர்வையே விரும்புகின்றனர்.

இப்படியான ஏற்பாடுகள் உலகின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதைச் செய்தாலும் சீனா தம்மைப் பிணையெடுக்கும் என்ற எண்ணம் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மத்தியில் நிலவுகிறது. அத்தகைய எண்ணம் நல்லதல்ல” என்று தெரிவித்தார்.

சீன கம்யூனிஸக் கட்சி உலகளவில் 180 நாடுகளில் 600 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிவருவதாக இந்தச் சந்திப்பின் போது ராவோ ஹூஐஹூவா சுட்டிக்காட்டினார்.

2012ஆம் ஆண்டில் பீஜிங்கில் இடம்பெற்ற கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் பங்கேற்றிருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் கம்யூனிஸக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது நேரடிச் சந்திப்பாக இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *