மேலும்

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்தது மக்களின் ஆணைக்கு எதிரானது – இரா.சம்பந்தன்

R.sampanthanகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே, கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஹபீஸ் நசீர் முகமத் நேற்று பதவியேற்றது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, அரசாங்கக் கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிட்டிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக பரப்புரை செய்திருந்தது.

அதுபோலவே, இம்முறை அதிபர் தேர்தலிலும் அரசாங்கக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது.

இந்த சூழ்நிலையில், மீண்டும் முன்னைய அரசாங்கக் கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட 6 ஆயிரத்து 100 வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்றிருந்தது.

எங்களை விட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையே வென்றிருந்தது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தது.

எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை.

இவற்றின் அடிப்படையிலேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஆட்சியமைப்பது குறித்துப் பேச்சு நடத்தினோம். ஆனால் இணக்கப்பாடு ஏற்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *