சிறிலங்காவின் புதிய அரசுக்கு உதவத் தயார் – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இன்னும் வெளிப்படையான, ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்றுக்காலை வெளியிட்ட 2015ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசன் ரைஸ் வொசிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவகத்தில் நேற்று விளக்கமளித்திருந்தார்.
இதன்போது அவர், சிறிலங்கா, மியான்மார், துனிசியா ஆகிய நாடுகளை மாற்றங்கள் நிகழும் நாடுகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
”மாற்றங்கள் நிகழும், பர்மா, துனிசியா, சிறிலங்கா போன்ற நாடுகள், இன்னும் வெளிப்படையான, அதிகம் ஜனநாயகமுள்ள, சமூகங்களை உள்ளடக்கிய மாற்றங்களுக்கு நாங்கள் உதவுவோம்.
ஒவ்வொரு பிராந்தியத்திலும், உள்ள மக்கள் தமது அரசாங்கங்களிடம், அதிகளவு சுதந்திரத்தையும், அதிகமான பொறுப்புக்கூறலையும் இந்த நேரத்தில் எதிர்பார்க்கின்றனர்.
இந்தநிலையில், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, வெளிப்படையான அரசாங்கத்தை ஊக்குவித்தல், சிவில் சமூகத்துடன் இணைந்து நிற்பது ஆகியவையே எமது மூலோபாயமாகும்.
ஆபத்தில் உள்ள நெறிமுறைகளைப் பாதுகாத்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு நாம் ஆதரவளிப்போம்.
தாக்குதலுக்கு உள்ளாகும் குடிமக்களையும், அரசசார்பற்ற நிறுவனங்களையும் பாதுகாக்க உதவுவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.