கனேடிய இராணுவ, காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளை அச்சுறுத்திய இலங்கைத் தமிழர் கைது
கனடாவின் அரசாங்க, இராணுவ, காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல்களை விடுத்து வந்த ரொரன்ரோவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவரை கனேடிய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்ராரியோ மாகாணத்தில் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்து, தாம் விசாரணைகளை ஆரம்பித்து, 51 வயதான, ரூபன் பலராம் சிவராம் என்ற இலங்கைத் தமிழரை கைது செய்துள்ளதாக கனேடிய காவல்துறை தெரிவித்துள்ளது.
உயர்மட்ட அரசியல்வாதிகளில் இருந்து மூத்த காவல்துறை அதிகாரிகள் வரை இவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கும் கூட அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என கனேடிய காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவைப் பூர்வீகமாக கொண்ட இவர் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும், கொலை அச்சுறுத்தல் விடுத்தும், வெறுக்கத்தக்க பரப்புரை செய்தும், மக்களைத் துன்புறுத்தியுள்ளார்.
இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததற்கான காரணம் தெரியவரவில்லை. விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவரது கணினியும் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட இவர்,தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும், மூன்று கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகளும், சுமத்தப்பட்டுள்ளன.
மேலதிக குற்றச்சாட்டுகள் இன்னமும் பதிவாகவில்லை. இன்னும் பலர் வந்து முறையிடலாம்.” என்றும் கனேடியக் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.