சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் சம்பந்தன் – கூட்டமைப்புக்குள் சர்ச்சை
கொழும்பில் இன்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றுள்ளார்.
1972ம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக தமிழ்த் தலைவர் ஒருவர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்தில் இருந்தே சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் வழக்கம் இருந்து வந்தது.
எனினும், இம்முறை சிறிலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான எந்த உத்தரவாதமும் கிட்டாத நிலையில், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் இரா.சம்பந்தன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் இதனை வன்மையாக கண்டித்துள்ளதுடன், உடனடியாக கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.