மகிந்தவைப் போல, மைத்திரி கையிலும் ‘வஜ்ரா’
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மைக்காலமாக, சக்தியை அளிக்கும் என்று கூறப்படும், ‘வஜ்ரா’ என்ற தங்க நிறமுள்ள மாந்திரீகப் பொருள் ஒன்றை தனது கைக்குள் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் எங்கு செல்லும் போதும் அதை எடுத்துச் செல்வதுடன், தேர்தல் பரப்புரை மேடைகளிலும், அதனைக் கைக்குள் வைத்திருக்கிறார்.
சக்தியைப் பெருக்கும் ஆயுதம் என்று கூறப்படும் இந்த ‘வஜ்ரா’வை இந்திய மாந்திரீகர்கள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்சவும் கூட சில கூட்டங்களில் கையில் இந்த ‘வஜ்ரா’வுடன் உரையாற்றும் ஒளிப்படங்கள் வெளியாகியிருந்தன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சோதிடர்களை நம்பியிருப்பதாகவும், அவர் மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்திருப்பதாகவும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விமர்சித்திருந்தார்.
தாம் சோதிடத்தை நம்புவதில்லை என்றும் அவர் கூறியிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவும், மகிந்தவின் கையில் இருப்பது போன்ற வஜ்ராவுடன் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் கையிலும், ‘வஜ்ரா’ இருப்பதைக் காட்டும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்சவின் மூடநம்பிக்கைகளை விமர்சித்த மைத்திரிபாலவும், அதே மூடநம்பிக்கைக்குள் சிக்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.