சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த அனைத்துலக சக்திகள் முயற்சி – இராணுவத் தளபதி குற்றச்சாட்டு
சிறிலங்காவில் குழப்பநிலையை ஏற்படுத்த பல்வேறு அனைத்துலக சக்திகளும் முயற்சிப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்குப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் ஆயிரக்கணக்கான படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெலிக்கந்தையில் உள்ள கிழக்குப் படைகளில் தலைமையகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், அவர் மேலும் உரையாற்றிய போது,
“இராணுவத்தின் பிரதான பொறுப்பு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும்.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அவை சிறிலங்கா இராணுவத்தால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னமும், சில அனைத்துலக சக்திகள் ஈடுபட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலரின் வலுவான, நடவடிக்கைகளினால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பயனற்றுப் போயுள்ளன.
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில் நிலவும் உறுதியற்ற நிலையுடன் ஒப்பிடுகையில், சிறிலங்காவில் உறுதியான நிலை காணப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.