ஐதேகவின் வலையிலும் ‘பெரியமீன்’ சிக்கியது?
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர இன்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன.
இன்று பிற்பகல் எதிரணியின் செய்தியாளர் மாநாடு ஒன்றில் இதுதொடர்பாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஹிருணிகாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட செய்தியாளர்கள் எவருக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
அதேவேளை, தாம் பெரியதொரு மீனைப் பிடித்துள்ளதாக ஐதேகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மைத்திரிபால சிறிசேனவை கறைபடியாத சுத்தமான அரசியல்வாதி என்று ஹிருணிகா கருத்து வெளியிட்டிருந்தார்.
அவர், மைத்திரிபால சிறிசேன தரப்புடன் பேச்சுக்களை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிருணிகா பிறேமச்சந்திரவின் ஆதரவாளரான, கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேசசபைத் தலைவர் பிரசன்ன சோலங்காராச்சி நேற்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மாகாணசபை மட்டத்திலும், எதிரணி வேட்பாளரை ஆதரிக்கும் ஆளும்கட்சியினரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினரும் சிலங்கா சதந்திரக் கட்சியின் கொலன்ன தொகுதி அமைப்பாளருமான ஜயதிஸ்ஸ ரணவீர, தாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.