ரணிலுடன் அஜித் டோவல் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக தலைவர்களுடன், அஜித் டோவல் நடத்திய சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐதேக தலைவர்களுடனான குறுகிய நேரச் சந்திப்பு ஒன்றையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுடன், தனியாக – சுமார் 10 நிமிடங்கள் பேச்சு நடத்தியுள்ளார் அஜித் டோவல்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும், கொழும்பிலுள்ள முக்கிய வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிரணியின் தேர்தல் மூலோபாயம் மற்றும் பரப்புரைத் திட்டங்கள் குறித்தும், அஜித் டோவல் விசாரித்து அறிந்து கொண்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் கரிசனைக்குரிய முக்கிய விவகாரமான, சிறிலங்காவில் சீனாவின் தலையீடு குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், நேற்றுமாலை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையும் தனியாகச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.