சிறிலங்கா செல்லும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
சிறிலங்காவில் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நேற்று வெளியிட்டுள்ள புதிய பயண எச்சரிக்கையில், சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், எந்தவொரு அரசியல் கூட்டங்கள், பேரணிகளையும், பிரித்தானியர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அரசியல் பேரணிகளிலும், தேர்தல் பரப்புரைகளிலும், காலத்துக்குக் காலம் வன்முறைகள் இடம்பெறுவதுண்டு என்றும், அங்கு, தீவிரவாத அச்சுறுத்தலும் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டவர்கள் கூடும் இடங்களில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்றும் பிரித்தானியா எச்சரித்துள்ளது.
அளுத்கம வன்முறைகளை சுட்டிக்காட்டியுள்ள இந்த அறிக்கை, நாட்டின் பிற பகுதிகளிலும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படும் ஆபத்து இருப்பதால், பிரித்தானியர்கள், மிக கவனமாகவும், போராட்டங்களில் இருந்து விலகியும் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
வடக்கிற்குப் பயணம் செய்வதற்கு வெளிநாட்டுக் கடவுச்சீட்டைக் கொண்டிருப்போருக்கு விதிக்கப்பட்டுள்ள இராணுவக் கட்டுப்பாடு குறித்தும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றே வடக்கிற்குச் செல்லுமாறும், சிறிலங்கா படையினர் உள்ள பகுதிகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், இந்த அறிக்கையில், கோரப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம், எந்தக் குற்றச்சாட்டோ, நீதி விசாரணையோ இன்றி நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.