வடக்கின் தற்போதைய நிலவரங்கள் – டோவலுக்கு கூட்டமைப்பு விளக்கம்
போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ள இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பிலுள்ள தாஜ் விடுதியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சூழல் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, அதிகரித்த சிறிலங்கா இராணுவப் பிரசன்னம், உயர்பாதுகாப்பு வலயங்களால் மீள்குடியமர்வில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதற்கிடையே, இன்றுகாலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்றுகாலை சந்தித்துப் பேசவுள்ளார்.