மேலும்

இன்று காலை நேபாளம் செல்கிறார் மகிந்த – நரேந்திர மோடியுடன் முக்கிய சந்திப்பு

modi-mahindaநேபாளத் தலைநகர் காத்மண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது. இருநாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் ஆகிய எட்டு உறுப்பு நாடுகளினதும், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை 9.30 மணியளவில் காத்மண்டு வந்தடைவார் என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3 மணியளவில் காத்மண்டு விமான நிலையத்தை வந்தடைவார்.

காத்மண்டு விமான நிலையத்தின் ஊடாக, நாளொன்றுக்கு 300 விமானங்கள் பயணங்களை மேற்கொள்ளும் நிலையில், சார்க் மாநாட்டுத் தலைவர்களின் வருகையால் அனைத்துலக விமான சேவை அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், பார்வையாளராகப் பங்கேற்கவுள்ளார்.

அவர் ஏற்கனவே நேபாளத்தை சென்றடைந்துள்ளார்.

மேலும் இந்த மாநாட்டின் பக்க நிகழ்வாக நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரும், இந்தச் சந்திப்பில் பங்கேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து இன்னமும் இறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *