திலிப் சின்காவின் பதவிக்காலம் முடிகிறது – சிறிலங்காவைக் காப்பாற்ற வரப்போகும் புதியவர் யார்?
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போகும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய, இந்திய இராஜதந்திரியான திலிப் சின்காவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் வதிவிடப் பிரதிநிதியான திலிப் சின்காவே, கடந்த ஆண்டுகளில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்களை செய்வதில் முன்னின்று செயற்பட்டவர்.
அவர், வரும் 31ம் நாளுடன் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் தொடர்பான மேற்குலகினால் மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், ஜெனிவாவுக்கான அடுத்த வதிவிடப் பிரதிநிதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு நாடுகளால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்களில் திருத்தங்களை மேற்கொள்வதில் இந்தியாவே முக்கிய பங்காற்றி வந்துள்ளது.
எனவே, அந்தப் பதவிக்கு அனுபவம்மிக்க ஒருவரே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக இருக்கும், சையட் அக்பருதீனை ஜெனிவாவுக்கான பிரதிநிதியாக நியமிப்பதற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சு பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தியப் பிரதமர் செயலகமே இதுதொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்று சவுத் புளொக் தகவல்கள் தெரிவிக்கின்றன.