வெள்ளாங்குளத்தில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை
மன்னார் – வெள்ளாங்குளத்தில் இன்றிரவு இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றுக்குள் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
வெள்ளாங்குளம் கணேசபுரம் என்ற இடத்தில், இன்றிரவு 8.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக, இலுப்பைகடவை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த, கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
இவர் முன்னர் தமிழீழ காவல்துறையில் பணியாற்றியவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவரின் சடலம் இன்னமும் வீட்டிலேயே கிடப்பதாகவும், நீதிபதி வந்து பார்வையிட்ட பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வெள்ளாங்குளம் மற்றும் அதையண்டிய பகுதிகளில் பெருமளவு சிறிலங்கா படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இன்றிரவு பொதுமக்கள் பெரும் பதற்றத்துடன் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.