மீண்டும் போட்டியிட முடியுமா? மகிந்தவுக்குப் பதிலை அனுப்பியது உயர்நீதிமன்றம்
மூன்றாவது தவணைக் காலத்துக்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்த சட்டவிளக்கத்தை, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் நேற்றிரவு அதிபர் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக தமக்கு 38 மனுக்கள் கிடைத்திருந்ததாகவும், அவை அனைத்தையும், தலைமை நீதியரசர் மொகான் பீரிசுக்கு அனுப்பி வைத்ததாகவும், உயர்நீதிமன்ற பதிவாளர் மகேசி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் படி, இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் படம்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்றம் தனது கருத்தை நேரடியாகவே சிறிலங்கா அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் தலைமையில்,10 நீதியரசர்களைக் கொண்ட குழுவே விசாரணை நடத்தியிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் எல்லா நீதியரசர்களும் இந்த விசாரணையில் பங்கேற்பர் என்று முன்னர் கூறப்பட்ட போதும், 11 உயர்நீதிமன்ற நீதியரசர்களில், ஒருவர் மட்டும் வெளிநாடு சென்றுள்ளதால் விசாரணையில் பங்கேற்கவில்லை.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியுமா என்பது பற்றிய உயர்நீதிமன்றத்தின் கருத்து என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் வெளியிடவில்லை.