மேலும்

இலங்கை அகதிகளை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

wigneswaran-chennaiதமிழ்நாட்டில் தங்கியுள்ள ஒரு இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப  இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது,

தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக்கும், சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியை முறியடிப்பதற்கு, தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள ஒரு இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகளை, பொருத்தமான புனர்வாழ்வு நடவடிக்கைகளுடன், திருப்பி அனுப்புவதற்கு இந்தியா நடவடிக்கை வேண்டும்.

போருக்குப் பின்னரும் சிறிலங்காவில் தமிழர்கள் நிலை சற்றும் மாறவில்லை.

வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது, இன்னொருபுறம் சிறிலங்கா அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச் செயலாளர் மற்றும் சில அதிகாரிகள் தலைமையில் முரண்பாடான மற்றொரு நிர்வாகமும் செயல்படுகிறது.

தெற்கில் இருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற சிறிலங்கா அரசு சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.

இதனால், தமிழர் நலனுக்காக நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தடைப்படுகின்றன.

அரசியலமைப்பின் 13வது சட்டத்திருத்தம், நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அது எங்களுக்கு நன்மை அளிக்காது. அதில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது.

தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பெற இந்திய அரசு தலையிட்டு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேவேளை, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பத்தினர் சென்னையில் இன்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து, மீனவர்களின் விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதுகுறித்து கருத்து வெளியிட்ட, முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிறிலங்காவில் சட்டக்கோவையில் மரணதண்டனை இருந்தாலும், 1976ம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *