“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும்” – சிறிலங்கா அமைச்சர் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார், சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
“ஒரு அரசியல் கட்சியாகச் செயற்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டவுடனேயே அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல் கட்சிகள் மற்றும், அமைப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும்.
ஜனநாயகத்தை மதித்து சிறிலங்கா அரசாங்கம் அவ்வாறு செய்திருக்கவில்லை.
இருந்த போதிலும், ஜனநாயகம் மீது சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ள பரிவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறாகப் பயன்படுத்துகிறது.
விடுதலைப் புலிகளின் சார்பிலேயே நின்று, அவர்களின் முகவர்களாகச் செயற்படுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரியாக முன்னர் பணியாற்றிய றியர் அட்மிரல் சரத் வீரசேகர,பின்னர் ஆளும்கட்சியில் இணைந்து பிரதி அமைச்சரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.