ரவிராஜைக் கொல்ல கொலையாளிகளுக்கு துப்பாக்கியைக் கொடுத்த மூத்த இராணுவ அதிகாரி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி-56 துப்பாக்கியை, கொலையாளிகளுக்கு சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி வழங்கியது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நொவம்பர் 10ஆம் நாள் கொழும்பில், நாரஹேன்பிட்டியவில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி 56 துப்பாக்கியை கொலையாளிகளுக்கு, மூத்த இராணுவ அதிகாரி ஒருவரே வழங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனை உறுதிப்படுத்துவதற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மூத்த படை அதிகாரியிடம் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைத் தலைமையக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பான பல தகவல்களை, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஏனைய அரசியல் கொலைகள் தொடர்பான பல புதிய தகவல்கள் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.