12 பெண்களே நாடாளுமன்றத்துக்குத் தெரிவு – வீழ்ச்சி காணும் பெண்களின் பிரதிநிதித்துவம்
சிறிலங்காவில் கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம். 8ஆவது நாடாளுமன்றத்துக்கு, 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
இவர்களில் 12 பேர் மட்டுமே, நாடாளுமன்றத்துக்குத் தெரியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும், ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவர்களாவர்.
மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து இம்முறை ஒரு பெண் உறுப்பினரேனும் தெரிவாகவில்லை.
அதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில், கூடுதலான விருப்பு வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் தலதா அத்துகோரள பெற்றுள்ளார்.
இவர் 145,828 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்ற 48 வேட்பாளர்களில் தலதா அத்துகோரளவும் இடம்பெற்றுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட வரலாற்றில் பெண் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய விருப்பு வாக்கு இதுவாகும்.
கடந்த முறை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 13 பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.