25 விதமான 10 ரூபா நாணயக்குற்றிகளை வெளியிட்டது சிறிலங்கா
சிறிலங்காவின் 25 நிர்வாக மாவட்டங்களையும் சித்திரிக்கும் வகையில், 25 விதமான புதிய 10 ரூபா நாணயக்குற்றிகள் இன்று சிறிலங்கா மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் தொகுதி நாணயக் குற்றிகளை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை சிறிலங்கா மத்திய வங்கி தலைமையகத்தில் நடைபெற்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த புதிய நாணயக்குற்றிகளை சிறிலங்கா அதிபரிடம் கையளித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளை அல்லது முக்கியமான அடையாளங்களையும், சிறப்புப் பண்புகளையும் கௌரவித்து அவற்றை வெளிப்படுத்தும் வகையில், 25 வகையான 10 ரூபா நாணயக்குற்றிகளை சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில், நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில், நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.