சீனக் கடற்படை குறித்து இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும் – இந்தியப் பேராசிரியர் எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடற் பிராந்தியத்தில், துறைமுகங்களையும், தளங்களையும் கட்டியமைத்து, பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக, கடற்படைத் தலையீடுகளை விரிவுபடுத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புத் தொடர்பாக இந்தியா எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பேராசிரியர் சிறீகாந்த் கொண்டபள்ளி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியாக பல்கலைக்கழகத்தின் இந்தியப் பெருங்கடல் கற்கைகள் நிலையத்தினால், நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா என்ற தலைப்பிலான, இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய கற்கைகள் நிலையத்தின், சீன கற்கைகளுக்கான பேராசிரியரான சிறீகாந்த் கொண்டபள்ளி, இந்தக் கருத்தரங்கில் இந்தியா ஏன் சீனா தொடர்பான உறுதியான கொள்கைகளை இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விபரித்தார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியே அதன் 70 வீதமான வர்த்தகம் இடம்பெறுகிறது.
இது இன்னும் ஆறு ஆண்டுகளில் 90 வீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தில் இந்தியாவின் கட்டுப்பாட்டைக் குறைக்கும் எந்த முயற்சியும், பொருளாதாரச் செயற்பாடுகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டால், சீனா இந்தியப் பெருங்கடலில் கொண்டுள்ள செல்வாக்கின் மூலம், பின்கதவு வழியாக தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொள்ளும்.
சிறிலங்காவில் சக்தி மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், சீனா 50 பில்லியன் டொலர் வரையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
மிகவும் முக்கியமான, இந்தியாவின் தெற்கு கடலோரத்தை இலக்கு வைக்கும் நோக்கிலேயே சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தை சீனா நிறுவியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.