ஐ.நா விசாரணைகள் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து அதிருப்தி வெளியிட்டார் பீரிஸ்
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட வெளிநாட்டுத் தூதுவர்களிடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கு திருப்தியற்ற நிலை தோன்றியுள்ளது குறித்தே, அமைச்சர் பீரிஸ் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது வெளியிட்டார்.
ஐ.நா விசாரணைக் குழுவுக்கு சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை, முடிவுக்கு வந்த பின்னரும், பின்கதவு வழியாக சில தரப்பினரிடம் இருந்து சாட்சியங்கள் பெறப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டது குறித்து, 17 ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதுவர்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
அந்தந்த நாடுகளுடன் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேல்முறையீடு செய்யாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.