கனடா விமான விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பலி
கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமைஇரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செஸ்னா-150 விமானம் ஒன்றில் பயணம் செய்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அல்கோன்குயின் பார்க் பகுதியில், இடம்பெற்ற விபத்தில் சிக்கிப் பலியாகினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில், ஹலிபேர்டன் பகுதிக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த போது, ரொரொண்டோ பகுதி விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட இந்த செஸ்னா விமானத்தின் விமானியான லோகேஸ் லக்ஸ்மிகாந்தன், அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார்.
அதையடுத்து விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
காலநிலை மோசமாக இருந்ததால், அடர்ந்த வனப்பகுதியில், விமானத்தைத் தேடும் பணிகளில் சிக்கல் நீடித்தது.
புதன்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு சென்ற மீட்புக்குழுவினரால், இரண்டு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
விமானியான லோகேஸ் லக்மிகாந்தன் (25 வயது) மற்றும் பயணியான ரவீந்திரன் அருளானந்தர் ( 31 வயது) ஆகியோரே மரணமானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
விமானி லோகேஸ் லக்ஸ்மிகாந்தன் சென்னையில் இருந்து கனடாவில் குடியேறியவர்.
ரவீந்திரன் இலங்கையில் இருந்து கனடாவில் குடியேறியவராவார்.
இருவரும் கனடாவில் நோர்த்யோர்க் பகுதியில் வசித்து வந்தவர்களாவர்.
எரிபொருள் தீர்ந்து போனதாலேயே, விமானம் விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
லோகேஸ் ஒற்றை இயந்திர விமானத்தை, பிளை புளொக் ரைம் என்ற ரொரொண்டோவில் உள்ள விமான நிறுவனத்திடம், புட்ரோன்வில்லி விமான நிலையத்தில் திங்கட்கிழமை இரவு வாடகைக்குப் பெற்றிருந்தார்.
அந்த விமானத்தில் நண்பனான ரவி அருளானந்தருடன், பீற்றர்புரோ, சென்.ஹியூபேர்ட், கியூபெக், ஒட்டாவா ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டு மார்க்கம் விமான நிலையத்துக்குத் திரும்பும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
லோகேசுக்கு 200 மணி நேரம் விமானம் செலுத்திய அனுபவம் உள்ளது குறிப்பிடத்தக்கது.