சூடுபிடிக்கும் சிறிலங்கா அரசியல் களம் – அடுத்தது என்ன?
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு நேற்று இடம்பெற்றதையடுத்து, சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி, இன்று 19வது திருத்த யோசனை மீதான விவாதம் ஆரம்பமாகும் என்று ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமாலை இதுதொடர்பாக கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது.
அதில், தேர்தல் முறைமையை மாற்றும் யோசனையை உள்ளடக்காத 19வது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி ஆதரிக்காவிடினும், இன்று 19வது திருத்தம் மீதான விவாதம் ஆரம்பமாகும் என்று ஆளும்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மற்றொரு புறத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், இன்று காலை நாடாளுமன்றம் கூடும் போது, காரசாரமான விவாதங்கள் மற்றும், குழப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பதே எதிர்க்கட்சியின் உத்தியாக இருப்பதால், இன்றைய நாடாளுமன்றக் கூட்டம் பெரும் பரப்பரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இன்றும் நாளையும் 19வது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவது என்பதில் ஆளும்கட்சி உறுதியாக இருக்கிறது.
இதனைத் தோற்கடிப்பதில் எதிர்க்கட்சி உறுதியாக இருக்கும் நிலையில், அடுத்து சிறிலங்கா அரசியலில் நிகழவுள்ள மாற்றங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.