ஆணைக்குழுவின் அழைப்பாணை புத்தாண்டுப் பரிசு – என்கிறார் மகிந்த
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹம்பேகமுவ ரஜமகா விகாரையில் நேற்று கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு இப்போது சவால் ஏற்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு, புத்தாண்டுப் பிரிசாகும்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியது ஒரு ஊழல் என்று கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிபராக இருந்து கொண்டு, அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாவிட்டால், அந்தப் பதவி தேவையற்றது.
எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு செயற்பாடுகளால் காவல்துறையின் விசாரணையில் சிக்கிய எனது அரசாங்கத்தில் இருந்த சில அமைச்சர்கள், நாற்காலிகள் இருந்த போதிலும், எனது காலடியில் தரையில் அமர்ந்தனர்.
போதிபூஜைகளை நடத்தும் சுதந்திரம் கூட இப்போது இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.