கடைசி நேரத்தில் தேர்தலை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்களை வரும் மார்ச் 27ம் நாள் வரை நடத்துவதற்கு, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை அடுத்து, நாளை தேர்தல் நடைபெறாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து, இந்த தேர்தலை இடைநிறுத்துமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்டே, நாளை நடைபெறவிருந்த தேர்தலை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.
ஏற்கனவே, இந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2011ம் ஆண்டு முதல் முறையாகவும், 2012ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் மேல்முறையீட்டு நீதீமன்றினால் இடைநிறுத்தப்பட்டது.
இந்த தேர்தல் பிற்போடப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.
நாளைய தேர்தலுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.