சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்கமாட்டோம் – பீஜிங்கில் மங்கள சமரவீர
சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இன்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதே, மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.
“சீனாவுடன் கலந்தாலோசனை நடத்தாமல், மீளாய்வு செய்யப்படும் சீனாவின் திட்டங்கள் குறித்து சிறிலங்கா எந்த முடிவையும் எடுக்காது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக, சீன வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடவில்லை.
சீனாவின் திட்டங்கள் குறித்து மட்டும் சிறிலங்கா அரசாங்கம் மீளாய்வு செய்யவில்லை.
சீனாவின் முதலீடுகள் தொடர்பாக, நாம் எந்த இறுதி முடிவை எடுப்பதற்கும் முன்னதாக, சீனா அரசாங்கத்துடன் அதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம், கலந்துரையாடுவோம்.
சீனாவின் முதலீடுகளை சிறிலங்கா எப்போதும் வரவேற்கும். இப்போதும் கூட, இந்த முதலீடுகள் பாதுகாப்பான இடத்தில் தான் உள்ளன.
சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மீள நிலைநிறுத்தப்பட்ட, சூழலில், எல்லா முதலீட்டாளர்களுக்கும் உகந்த சூழலை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்.
எதிர்காலத்தில் எல்லாத் திட்டங்களும், முழுமையாக திறமையின் அடிப்படையிலேயே கருத்தில் கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.