கோத்தாவை நிறுத்தினால் தோல்வி உறுதி – மகிந்தவிடம் எடுத்துரைத்த வாசு
வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்தினால் பொதுஜன பெரமுன தோல்வியையே சந்திக்கும் என, அதன் பங்காளிக் கட்சி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதிபர் வேட்பாளர் தொடர்பாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருகிறார். வாசுதேவ நாணயக்காரவை நேற்று மகிந்த ராஜபக்ச சந்தித்து பேசினார். இதன் பின்னர் கருத்து வெளியிட்ட வாசுதேவ நாணயக்கார,
“அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பாலும் சஜித் பிரேமதாr அல்லது கரு ஜயசூரியவை வேட்பாளராகக் களமிறக்கும் என நான் நம்புகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய ஒருவரைத் தான் எமது அணி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும்.
கோத்தாபய ராஜபக்சவை சிறுபான்மை இன மக்கள் விரும்பமாட்டார்கள்.
நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராகப் போட்டியில் நிறுத்தினால், பொதுஜன பெரமுன தோல்வியையை சந்திக்கும்.
ராஜபக்ச குடும்பத்தில் குற்றச்சாட்டுக்களில் சிக்காத சமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கினால் வெற்றி உறுதி.
இதனை மகிந்த ராஜபக்சவிடம் இன்று நான் நேரில் தெரிவித்துள்ளேன். இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அதிபர் தேர்தலில் சமல் ராஜபக்ச வெற்றியீட்டி அவர் தலைமையில் புதிய ஆட்சி அமையும் போது பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச இருக்கவேண்டும். இதையும் மகிந்தவிடமும் சமலிடமும் நான் நேரில் எடுத்துரைத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.