தொடர்பாடல் இடைவெளியே தாக்குதலுக்குக் காரணம் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
புலனாய்வு அமைப்புகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் நிலவிய தீவிரமான தொடர்பாடல் இடைவெளியே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என்று, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபரும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
“தாக்குதலை நடத்திய அடிப்படைவாதிகள் குறித்தும், நடக்கவிருந்த தாக்குதல்கள் குறித்தும் தகவல்களும் புலனாய்வு அறிக்கைகளும் கிடைத்திருக்கின்றன. எனினும், அவற்றை எதிர்கொள்ளத் தயார்படுத்தப்படவில்லை.
அழிவுகளைத் தடுக்கும் திறன் கொண்டவர்களுடன் அந்த புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ளத் தவறியுள்ளனர்.
தாக்குதல் குறித்து எச்சரிக்கைகள் பெறப்பட்டன. இதுபோன்ற புலனாய்வு அறிக்கையை நாங்கள் பெற்றால், நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. அது நடைமுறையில் இருந்து எனக்குத் தெரியும்,
அந்த முடிவுகளை எடுப்பதில் அதிகாரிகள் தோல்வி கண்டதாக தெரிகிறது.
நான் காவல்துறை மா அதிபராக இருந்திருந்தால் அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்திருப்பேன்.
அனைத்து மாகாணங்களிலும் உள்ள மூத்த பிரதி காவல்துறை மா அதிபர்களுக்கும் தகவல் கொடுத்திருப்பேன். அத்தகைய தொடர்பு இருந்ததாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
காவல்துறை மா அதிபர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலருக்கும், தமது அமைச்சருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இந்தப் பொறிமுறை இருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.