மோடியின் திட்டத்தை நிராகரித்தார் மைத்திரி
மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க, இந்தியப் பிரதமரால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.
சிறிலங்கா மீனவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இந்திய எல்லைக்குள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடலாம் என்றும், இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறும், இந்தியா யோசனையை முன் வைத்தது.
எல்லை கடந்து மீன்பிடிக்க அனுமதிக்கும் இந்த திட்டத்தை சிறிலங்கா நிராகரித்து விட்டது.
இந்த திட்டம் வடக்கிலுள்ள மீனவர்களைப் பெரிதும் பாதிக்கும். அவர்கள் சிறிய படகுகளில், சென்று சிறிய மீன்கள், இறால்கள், சிங்க இறால்களைப் பிடிப்பவர்கள்.
இந்திய இழுவைப்படகுகளினால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும் என்பதாலேயே அந்த திட்டம் நிராகரிக்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.