சிறிலங்காவின் பொருளாதாரத்தை முன்னேற்ற அனைத்துலக நிதி நிறுவனங்கள், அமெரிக்காவுடன் பேச்சு
சிறிலங்காவின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்கு, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் ஆகியவற்றின் உதவியை புதிய அரசாங்கம் நாடியுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, நாட்டின் அபிவிருத்தி தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 17, 18ம் நாள்களில் வோசிங்டனில் பெயணம் மேற்கொண்ட அவர், உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் முல்யானி இன்ராவதியைச் சந்தித்து, பேசினார்.
இதன்போது, இந்த சிக்கலான நிலைமையிலும், தொடர்ந்து சிறிலங்காவின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவியளிப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
நல்லாட்சியில், வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லகாடேயையும் சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்காவின் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் குறித்து பயன்மிக்க பேச்சுக்கள் நடத்தியதாக, சிறிலங்காவும், அனைத்துலக நாணய நிதியமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் உதவித் திறைசேரி செயலர் ரமின் ரொலோயுடனும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது வரி மறுசீரமைப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசிய போது அரசாங்கம் புதிய அரசியல் கலாசாரத்தையும், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்றும்ரவி கருணாநாயக்க உறுதிப்படுத்தினார்.