முஸ்லிம் அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.
இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றிய அறிவிப்பை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனைப் பதவி விலகக் கோரியும், மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரையும் பதவி விலகக் கோரும் போராட்டங்கள் இன்று தீவிரமடைந்த நிலையிலேயே, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகும் முடிவை எடுத்தனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.ஹலீம், றிசாத் பதியுதீன், கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர்களான அலி சாகிர் மௌலானா, பைசல் காசிம், ஹரீஸ், பிரதி அமைச்சர்களான அப்துல் மஹ்ரூப், ஆகியோரே பதவி விலகியுள்ளனர்.
இவர்களின் பதவி விலகலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதேவேளை, இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய போதும், பின்வரிசை உறுப்பினர்களாக இருந்து, அரசாங்கத்துக்கு ஆதரவு அளி்ப்போம் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.